விஷாலின் சமர் பொங்கலுக்கு வருமா? வராதா??


விஷால் நடித்த ‘சமர்’ படம் இந்தமாதம் 28-ஆம் தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீரென்று அந்தப்படம் வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் இப்போது பொங்கலுக்கும் ‘சமர்’ ரிலீஸ் ஆகவில்லை என்று புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தபடத்தை தயாரித்து வரும் பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் கடுமையான நிதிச்சிக்கலில் தவித்துக்கொண்டிருப்பது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தெலுங்கு படத்தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம் தமிழில் முதல்முறையாக சிம்புவை வைத்து ‘ஒஸ்தி’ என்ற படத்தை தயாரித்திருந்தார்கள். ஆனால் அந்தப்படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டுகொண்டது. அடுத்த படமான விமல் நடித்த ‘இஷ்டம்’ படமும் அட்டர் ப்ளாப்பானதால் இப்போது அந்த நிறுவனம் புதிதாக தயாரித்து வரும் ‘சமர்’ படத்தில் கடுமையான நிதிச்சிக்கலை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பிரபல ஜெமினி லேப் நிறுவனத்தில் சில கோடி ரூபாய்க்கு கடன் இருக்கிறது, அதேபோல ஆனந்த் சினி சர்வீஸூக்கும் சுமார் 1 கோடி ரூபாய் 20 லட்சம் பணம் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. “இப்படி அடுத்தடுத்து இருக்கின்ற கடன் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு தியேட்டர் கேட்டால் கொடுக்க முடியாது. முதலில் இருக்கின்ற கடனையெல்லாம் அடைத்து விட்டு வாருங்கள் அப்புறம் உங்கள் படத்துக்கு தியேட்டர் தருகிறோம்” என்று தமிழ்நாடு தியேட்டர் ஓனர் அசோஸியேஷன் கண்டிஷனாக கூறி விட்டதால் சமர் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. விஷால், த்ரிஷா, திரு, யுவன்ஷங்கர்ராஜா என பெரிய காம்பினேஷன் என்பதால் இந்தப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment